Chapter: Verses:
Start  End 
 
 
திருவிவிலியம் பொது மொழிபெயர்ப்பு    

யோபு

முன்னுரை

விவிலியத்தின் ஞான இலக்கியங்களுள் 'யோபு' என்னும் இந்நூல் தலை சிறந்தது. ஒரு காலத்தில் கடவுளுக்கு ஏற்ற நீதிமானாக ஒருவர் வாழ்ந்து வந்தார்; அவர் பெயர் யோபு. அவர் செல்வர்; கடவுளுக்கு அஞ்சி நடந்தவர். கடவுளின் அனுமதியுடன் சாத்தான் யோபைச் சோதித்தான். இதனால் யோபு மக்களை இழந்தார். சொத்து சுகத்தை இழந்தார்; உடல் நலத்தையும் இழந்தார். இருப்பினும் அவர் கடவுளைத் தூற்றினாரில்லை. அவருக்கு ஏற்புடையவராகவே வாழ்ந்து வந்தார். அவர் மனைவியும் நண்பர்களும் அவருடன் வாக்குவாதம் செய்து, இறைவனின் நீதியை விளக்க முயன்றார்.

பழைய ஏற்பாட்டுப் பின்னணியின்படி, துன்பத்திற்குக் காரணம் ஒருவர் செய்யும் பாவமே. ஆகவே, யோபு படும் துன்பத்திற்குக் காரணம் அவர் செய்த பாவமே என்பது நண்பர்களின் கூற்று. தாம் அத்தகைய குற்றம் ஏதும் செய்யவில்லை என்பது யோபு கூறும் மறுப்பு. இவ்வாறு 'நீதிமான் ஏன் துன்பப்பட வேண்டும்?' என்ற வினாவிற்கு விடை காணும் போக்கில், நாடகம் போல் அமைந்துள்ளது இந்நூல்.

இந்நூலின் காலம் திட்டவட்டமாகத் தெரியவில்லை. பல அறிஞர்கள் இது பாபிலோனிய அடிமை வாழ்வுக்குப் பிற்பட்டது என்பர்.

நூலின் பிரிவுகள்
  1. முகவுரை 1:1 - 2:13
  2. யோபும் அவர்தம் நண்பர்களும் 3:1 - 31:40
    அ) யோபின் முறையீடு 3:1 - 26
    ஆ) முதல் உரையாடல் 4:1 - 14:22
    இ) இரண்டாம் உரையாடல் 15:1 - 21:34
    ஈ) மூன்றாம் உரையாடல் 22:1 - 27:23
    உ) ஞானத்தின் மேன்மை 28:1 - 28
    ஊ) யோபின் இறுதிப் பதிலுரை 29:1 - 31:40
  3. எலிகூவின் உரைகள் 32:1 - 37:24
  4. யோபுக்கு ஆண்டவரின் பதில் 38:1 - 42:6
  5. முடிவுரை 42:7 -17


அதிகாரம் 1

சாத்தான் யோபைச் சோதித்தல்
1 ஊசு என்ற நாட்டில் யோபு என்ற ஒருவர் இருந்தார். அவர் மாசற்றவரும் நேர்மையானவருமாய் இருந்தார். கடவுளுக்கு அஞ்சித் தீயதை விலக்கி வந்தார். 2 அவருக்கு ஏழு புதல்வரும் மூன்று புதல்வியரும் பிறந்தனர்.3 அவருடைய உடைமைகளாக ஏழாயிரம் ஆடுகளும், மூவாயிரம் ஒட்டகங்களும், ஐந்நூறு ஏர்க் காளைகளும், ஐந்நூறு பெண் கழுதைகளும் இருந்தன. பணியாள்களும் மிகப் பலர் இருந்தனர். கீழை நாட்டு மக்கள் எல்லாரிலும் இவரே மிகப் பெரியராக இருந்தார்.4 அவருடைய புதல்வர்கள் ஒவ்வொருவரும் தம் வீட்டில் தமக்குரிய நாளில் விருந்து தயாரித்து, தம் மூன்று சகோதரரிகளைத் தம்முடன் உண்டு குடிப்பதற்கு அழைப்பது வழக்கம்.5 விருந்து நாள்களின் முறை முடிந்ததும், யோபு அவர்களை வரவழைத்துத் தூய்மைப்படுத்துவார். என் பிள்ளைகள் ஒருவேளை பாவம் செய்து, உள்ளத்தில் கடவுளைத் தூற்றியிருக்கக்கூடும் என்று யோபு நினைத்து, காலையில் எழுந்து அவர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப எல்லார்க்காகவும் எரிபலியை ஒப்புக்கொடுப்பார். யோபு6 ஒருநாள் தெய்வப் புதல்வர் ஆண்டவர் முன்னிலையில் ஒன்றுகூடினர். சாத்தான் அவர்கள் நடுவே வந்துநின்றான்.7 ஆண்டவர் சாத்தானிடம், எங்கிருந்து வருகிறாய்? என்று கேட்டார். சாத்தான் ஆண்டவரிடம் உலகைச் சுற்றி உலவி வருகிறேன் என்றான்.8 ஆண்டவர் சாத்தானிடம், என் உழியன் யோபைப் பார்த்தாயா? அவனைப் போல் மாசற்றவனும், நேர்மையானவனும், கடவுளுக்கு அஞ்சி தீமையானதை விலக்கி நடப்பவனும் மண்ணுலகில் ஒருவனும் இல்லை என்றார்.9 மறுமொழியாக, சாத்தான் ஆண்டவரிடம் ஒன்றுமில்லாமலா யோபு கடவுளுக்கு அஞ்சி நடக்கிறான்?10 அவனையும் அவன் வீட்டாரையும், அவனுக்குரிய அனைத்தையும் நீர் சூழ்ந்து நின்று காக்கவில்லையா? அவன் கைவேலைகளுக்கு ஆசி வழங்கவில்லையா? அவன் மந்தைகளை நாட்டில் பெருகச் செய்யவில்லையா?11 ஆனால், உமது கையை நீட்டும்: அவனுக்குரியவற்றின்மீது கை வையும். அப்போது அவன் உம் முகத்திற்கு நேராகவே உம்மைப் பழிப்பான் என்றான்.12 ஆண்டவர் சாத்தானிடம், இதோ! அவனுக்குரியவையெல்லாம் உன் கையிலே: அவன்மீது மட்டும் கை வைக்காதே என்றார். சாத்தானும் ஆண்டவர் முன்னிலையினின்று புறப்பட்டான்.

யோபு பிள்ளைகளையும் செல்வத்தையும் இழத்தல்
13 ஒருநாள் யோபின் புதல்வரும் புதல்வியரும் தம் மூத்த சகோதரன் வீட்டில் உண்டு திராட்சை இரசம் குடித்துக் கொண்டிருந்தனர்.14 அப்போது தூதன் ஒருவன் யோபிடம் வந்து, எருதுகள் உழுதுகொண்டிருந்தன: கழுதைகளும் அவற்றிற்கு அருகில் மேய்ந்து கொண்டிருந்தன.15 அப்போது செபாயர் பாய்ந்து, அவற்றைக் கைப்பற்றினர். ஊழியரை வாள் முனையில் வீழ்த்தினர். நான் ஒருவன் மட்டுமே தப்பி உம்மிடம் சொல்ல வந்தேன் என்றான்.16 இதைச் சொல்லி முடிப்பதற்குள் இன்னொருவன் வந்து, கடவுளின் நெருப்பு விண்ணிலிருந்து விழுந்து, ஆடுகளையும், வேலையாள்களையும் சுட்டெரித்துவிட்டது. நான் ஒருவன் மட்டுமே தப்பி உம்மிடம் சொல்ல வந்தேன் என்றான்.17 இதைச் சொல்லி முடிப்பதற்குள் இன்னொருவன் வந்து, கல்தேயர் மூன்று கும்பலாக வந்து ஒட்டகங்கள் மேல் பாய்ந்து அவற்றைக் கைப்பற்றிக் கொண்டனர். ஊழியர்களை வாள் முனையில் வீழ்த்தினர். நான் ஒருவன் மட்டுமே தப்பி உம்மிடம் சொல்ல வந்தேன் என்றான்.18 இதைச் சொல்லி முடிப்பதற்குள் இன்னொருவன் வந்து, உம் புதல்வரும், புதல்வியரும் தம் மூத்த சகோதரன் வீட்டில் உண்டு திராட்சை இரசம் குடித்துக்கொண்டிருந்தனர்.19 அப்போது திடீரெனப் பெருங்காற்று பாலை நிலத்திலிருந்து வீசி, வீட்டின் நான்கு மூலைகளிலும் தாக்கியது. வீடு இளைஞர்கள் மேல் இடிந்து விழ, அவர்களும் மடிந்துவிட்டனர். நான் ஒருவன்மட்டுமே தப்பி உம்மிடம் சொல்ல வந்தேன் என்றான்.20 யோபு எழுந்தார்: தம் ஆடைகளைக் கிழித்துக்கொண்டார்: பின்பு தரையில் விழுந்து வணங்கி,21 என் தாயின் கருப்பையினின்று பிறந்த மேனியானாய் யான் வந்தேன்: அங்கே திரும்புகையில் பிறந்த மேனியனாய் யான் செல்வேன்: ஆண்டவர் அளித்தார்: ஆண்டவர் எடுத்துக்கொண்டார். ஆண்டவரது பெயர் போற்றப்பெறுக! என்றார்.22 இவை அனைத்திலும் யோபு பாவம் செய்யவுமில்லை: கடவுள் மீது குற்றஞ்சாட்டவும் இல்லை.


திருவிவிலியம் பொது மொழிபெயர்ப்பு    

Free counters!