தானியேல் |
|
முன்னுரை |
'தானியேல்' என்னும் இந்நூல் யூதர்கள் வேற்றினத்து மன்னனால் ஒடுக்கப்பட்டுத் துன்புறுத்தப்பட்ட போது எழுதப்பெற்றது. கொடுங்கோல் மன்னனை வீழ்த்தி இறைவன் தம் மக்களை மீண்டும் முன்னிருந்தவாறே சிறப்புச் செய்வார் என்பதை வற்புறுத்துமாறு இந்நூலில் எடுத்துக் காட்டுகளும் காட்சியளும் கையாளப்பட்டன. இந்நூல் இரு பெரும் பிரிவுகளைக் கொண்டுள்ளது: 1. தானியேலும் அவருடைய தோழர்களும் கடவுள் மீது அசையாத நம்பிக்கை கொண்டு, அவர்தம் கட்டளைகளுக்குப் பணிந்து நடந்ததால் தங்கள் எதிரிகளை மேற்கொண்டனர். இப்பகுதியில் காணப்படுபவை பாபிலோனிய, பாரசீகப பேரரசுகளின் வரலாற்றுப் பின்னணியில் எழுதப்பட்டுள்ளன. 2. தானியேல் கண்ட காட்சிகள் பாபிலோனியப் பேரரசு தொடங்கி அடுத்து வரும் எல்லாப் பேரரசுகளின் எழுச்சியையும் வீழ்ச்சியையும் சுட்டிக் காட்டும் உருவகங்களாக அமைந்து, வேற்றினத்துக் கொடுங்கோலனின் வீழ்ச்சியையும் இறைமக்களின் வெற்றியையும் முன்னுரைக்கின்றன. இந்நூலின் ஒரு பகுதி ( 1:1-2:3: 8:1-12:13) எபிரேய மொழியிலும், மறு பகுதி (2:4-7:28) அரமேய மொழியிலும் எழுதப்பட்டுள்ளன. 'அசரியாவின் மன்றாட்டு', 'மூவர் பாடல்', 'சூசன்னா', 'பேலும் பறவை நாகமும்' ஆகிய நான்கு பகுதிகள் கிரேக்க மொழியில் மட்டும் காணப்படுகின்றன. அவை, 'தானியேல்: இணைப்புகள்' என்னும் இணைத்திருமுறை நூலின் இடம் பெற்றுள்ளன. நூலின் பிரிவுகள் - தானியேலும் தோழர்களும் 1:1 - 6:28
- தானியேலின் காட்சிகள் 7:1 - 11:45
அ) நான்கு விலங்குகள் 7:1 - 28 ஆ) செம்மறியும் வெள்ளாடும் 8:1 - 9:27 இ) வான தூதர் 10:1 - 11:45 - முடிவின் காலம் 12:1 - 13
|
|
அதிகாரம்
1
|
தானியேலும் அவரின் தோழர்களும் (1:1 - 6:28) வேற்றினத்து அரசன் அவையில் தானியேல் 1 யூதா அரசன் யோயாக்கிமின் மூன்றாம் ஆட்சியாண்டில் பாபிலோனிய அரசன் நெபுகத்னேசர் எருசலேமுக்கு வந்து முற்றுகையிட்டான். 2 தலைவராகிய ஆண்டவர் யூதா அரசனாகிய யோயாக்கிமையும் கடவுளுடைய கோவிலின் கலன்கள் சிலவற்றையும் அவனிடம் கையளித்தார். அவனும் அவற்றைச் சீனார் நாட்டிலிருந்த தன் தெய்வத்தின் கோவிலுக்கு எடுத்துச் சென்று அவற்றைத் தன் தெய்வத்திற்குரிய கருவூலத்தில் சேர்த்தான். 3 அப்பொழுது, அரசன் தன் அரண்மனை அலுவலரின் தலைவனாகிய அஸ்பெனாசுக்கு, அரசகுலத்தையும் உயர் குடியையும் சார்ந்த இஸ்ரயேலர் சிலரைக் கொண்டுவருமாறு கட்டளையிட்டான்.4 அக்கட்டளைப்படி அவர்கள் உடல் ஊனமற்ற, அழகுமிக்க, எல்லா ஞானத்திலும் தேர்ச்சி பெற்ற, அறிவிலும் உணர்விலும் கல்வியிலும் சிறந்த, அரசனின் அரண்மனையில் பணியாற்றும் திறமை பெற்ற இளைஞர்களாய் இருக்க வேண்டும். மேலும் அவர்கள் கல்தேய மொழியை எழுதவும் பேசவும் கற்றுக் கொள்ளவேண்டும்.5 அரசன் தான் உண்டுவந்த சிறப்புணவிலும், பருகி வந்த திராட்சை இரசத்திலும் நாள்தோறும் ஒரு பங்கை அவர்களுக்குக் கொடுக்கும்படி ஏற்பாடு செய்தான். இவ்வாறு மூன்றாண்டுகள் பயிற்சி அளித்தபின், இறுதியில் அவர்களை அரசன் முன்னிலையில் கொண்டு வந்து நிறுத்தவேண்டும் என்று ஆணையிட்டான்.6 இப்படித் தேர்ந்ததெடுக்கப்பட்டவர்களுள் யூதா குலத்தைச் சார்ந்த தானியேல், அனனியா, மிசாவேல், அசரியா என்பவர்களும் இருந்தார்கள்.7 அலுவலரின் தலைவன் தானியேலுக்குப் பெல்தசாச்சர் என்றும் அனனியாவுக்குச் சாத்ராக்கு என்றும் மிசாவேலுக்கு மேசாக்கு என்றும், அசரியாவுக்கு ஆபேத்நெகோ என்றும் மாற்றுப் பெயரிட்டான்.8 அரசனது சிறப்புணவினாலும், அவன் பருகிவந்த திராட்சை இரசத்தினாலும் தம்மைத் தீட்டுப்படுத்திக் கொள்ளலாகாது என்று தானியேல் தம் உள்ளத்தில் உறுதி செய்து கொண்டார்: அவ்வாறே தாம் தீட்டுப்படாதிருக்க அலுவலர் தலைவனிடம் அனுமதி கேட்டார்.9 அலுவலர் தலைவன் தானியேலுக்குப் பரிவும் இரக்கமும் காட்டுமாறு கடவுள் அருள்கூர்ந்தார்.10 அலுவலர் தலைவன் தானியேலை நோக்கி, உங்களுக்கு உணவும் பானமும் ஏற்பாடு செய்திருக்கும் அரசனாகிய என் தலைவருக்கு நான் அஞ்சிகிறேன். ஏனெனில் உங்களையொத்த வயதினரை விட நீங்கள் களை குன்றியிருப்பதை அரசன் கண்டால் என் தலையே போய்விடும்: நீங்கள்தான் அதற்குக் காரணமாவீர்கள் என்றான்.11 தானியேல், அனனியா, மிசாவேல், அசரியா ஆகியவர்களுக்கென அலுவலர் தலைவனால் நியமிக்கப்பட்ட மேற்பார்வையாளரிடம் தானியேல் கூறியது:12 ஐயா! தயை கூர்ந்து பத்து நாள் உம் ஊழியர்களாகிய எங்களைச் சோதித்துப் பாரும். எங்களுக்கு உண்பதற்கு மரக்கறிகளையும், குடிப்பதற்குத் தண்ணீரையும் மட்டுமே தாரும்.13 அதற்குப் பிறகு, எங்களது தோற்றத்தையும் அரசனது சிறப்புணவை உண்ணும் மற்ற இளைஞர்களின் தோற்றத்தையும் ஒப்பிட்டுப்பாரும்: அதன்பின் உமக்குத் தோன்றியபடி உம்முடைய பணியாளர்களாகிய எங்களுக்குச் செய்தருளும் என்றார்.14 அவனும் இக்காரியத்தில் அவர்களுக்கு இணங்கி அவர்களைப் பத்து நாள் சோதித்துப் பார்த்தான்.15 பத்து நாள்கள் ஆயின. அரசனது சிறப்புணவை உண்டுவந்த இளைஞர்கள் அனைவரையும் விட அவர்களது தோற்றம் மிகக் களையுள்ளதாயும் உடற்கட்டு மிகச் செழுமையுள்ளதாயும் காணப்பட்டது.16 ஆதலால் மேற்பார்வையாளன் அவர்கள் உண்ணவேண்டிய சிறப்புணவுக்கும் பருகவேண்டிய திராட்சை இரசத்திற்கும் பதிலாக மரக்கறி உணவையே அவர்களுக்குக் கொடுத்து வந்தான்.17 கடவுள் இந்த நான்கு இளைஞர்களுக்கும் அறிவையும் அனைத்து இலக்கியத்தில் தேர்ச்சியையும் ஞானத்தையும் அருளினார். சிறப்பாக, தானியேல் எல்லாக் காட்சிகளையும் கனவுகளையும் உய்த்துணரும் ஆற்றல் பெற்றிருந்தார்.18 அரசன் தன் முன்னிலைக்கு அவர்களைக் கொண்டு வரவேண்டுமென்று குறித்த நாள் வந்தது. அலுவலர் தலைவனும் அவர்களை நெபுகத்னேசர் முன்னிலையில் கொண்டுவந்து நிறுத்தினான்.19 அரசன் அவர்களோடு உரையாடலானான்: அப்பொழுது அவர்கள் அனைவருள்ளும் தானியேல், அனனியா, மிசாவேல், அசரியா ஆகியோருக்கு இணையாக யாரும் காணப்படவில்லை: எனவே அவர்கள் அரசன் முன்னிலையில் பணிபுரியலாயினர்.20 ஞானம், விவேகம் சார்ந்தவற்றில் அரசன் அவர்களோடு கலந்துரையாடினான். அப்பொழுது அவனது அரசில் இருந்த எல்லா மந்திரவாதிகளையும் மாயவித்தைக்காரர்களையும் விட அவர்கள் பத்து மடங்கு சிறந்தவர்களாய் இருந்ததைக் கண்டறிந்தான்.21 இவ்வாறு சைரசு என்ற அரசனது முதலாம் ஆட்சியாண்டுவரை தானியேல் தொடர்ந்து பணிபுரிந்தார். |